தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 8:10 PM IST

ETV Bharat / state

"காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்".. உயர் நீதிமன்றத்தில் TANGEDCO உறுதி! - TANGEDCO jobs

TANGEDCO: காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits- ETV Bharat)

சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 36 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்தப் போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பொது நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களது சுயநலத்திற்காக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின் வாரியம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விழாக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், "தாங்கள் அறிவித்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், தமிழக முழுவதும் மின் பகிர்மானக் கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால் கேங்மேன்களை மின் இணைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதாகவும், தகுதி இல்லாத இந்த பணிகளில் தங்களைப் பயன்படுத்துவதனால் மூன்று ஆண்டுகளில் மின் விபத்து ஏற்பட்டு 70 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து இன்று (புதன்கிழமை) மதியம் 2.15 மணிக்கு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, "காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக கேங்மேன் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்", தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும், ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிக அடிப்படையிலோ காலியிடங்களை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:புலியூர் கோட்டம் டூ சென்னை மாநகரம்.. கடந்து வந்த வரலாறு.. 'மெட்ராஸ் டே' சிறப்புத் தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details