தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / state

விவசாய வேலைக்காக சென்னை வந்த மேற்கு வங்க இளைஞர் உயிரிழப்பு.. காரணம் என்ன? - West Bengal Youth Died Of Hunger

விவசாய வேலைக்காக சென்னை வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று நாட்களாக உணவில்லாமல் பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கோப்புப்படம்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 நபர்கள் கடந்த மாதம் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்த நிலையில், மூன்று நாள் வேலை முடிந்தபின் வேலை இல்லாததால் அவர்களது சொந்த ஊருக்கே செல்வதற்காக கடந்த 13ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர்.

ஆனால், அவர்களில் 5 பேர் மட்டும் ஊருக்கு செல்லாமல் கடந்த 16ஆம் தேதி காலை வரையில் உண்பதற்கு உணவுகூட இல்லாமல், சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையிலேயே தங்கி இருந்துள்ளனர். மேலும், அவர்கள் 5 பேரும் உணவு இல்லாமல் பட்டினி கிடந்ததால் மயங்கி விழுந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், மயங்கி விழுந்த ஐந்து நபர்களையும் மீட்டு உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணையில், பட்டினி கிடந்து மயங்கி விழுந்தவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மங்ருல் என்ற பகுதியைச் சேர்ந்த சமர்கான் (35), மாணிக் கோரி (50), சத்யா பண்டிட் (33), ஆசித் பண்டிட் (35), கோனாஸ் ஸ்மித் (52) என தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே ஐந்து நபர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணிக் கோரி, சத்யா பண்டிட், ஆசித் பண்டிட், கோனாஸ் ஸ்மித் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தென் மாவட்ட பள்ளிகளில் பெருகும் சாதி மோதல்கள்; போர்க்களமாக மாறும் கல்விக் கூடங்கள்.. தீர்வு தான் என்ன?

இத்தகைய சூழலில், சமர்கான் என்பவர் மட்டும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக, மேற்கு வங்கத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details