தமிழ்நாடு

tamil nadu

மருதமலையில் தாயுடன் இருந்த குட்டி யானை முதுமலையில் உயிரிழப்பு! - baby elephant died in nilgiris

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:43 PM IST

Baby Elephant died: நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் நேற்றிரவு இறந்த ஆண் குட்டி யானையை பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு வனத்துறையினர் தீ மூட்டி எரித்தனர்.

இறந்த ஆண் குட்டி யானை புகைப்படம்
இறந்த ஆண் குட்டி யானை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் நடக்க முடியாமல் சோர்வடைந்து வனப்பகுதியில் படுத்துக் கிடப்பதாக கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரியவே, விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர். அப்பொழுது, தாய் யானையுடன் ஆண் குட்டி யானை ஒன்றும் இருந்தது.

தாய் யானை சிகிச்சைக்குப் பின் வனப்பகுதிக்குச் செல்லும் நேரத்தில், ஆண் குட்டி யானை அதனை விட்டுப் பிரிந்து சென்றது. பின்னர், ஆண் குட்டி யானையை தாயுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் போராடினர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி அந்த ஆண் குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமிற்கு அழைத்து வந்தனர். அங்கு அதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு ஆண் குட்டி யானை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் அறிவுரைப்படி, துணை இயக்குனர் வித்யா முன்னிலையில், முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் இறந்த ஆண் குட்டி யானையின் குடலில் புண்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் ஆண் குட்டி யானை பலவீனம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. யானையின் உடல் உறுப்பு பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். பின்பு, இறந்த ஆண் குட்டி யானையின் உடலை தீ மூட்டி எரித்தனர்.

இதையும் படிங்க:நீலகிரியில் கனமழை; வீடுகளுக்குள் மழைநீர்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - NILGIRIS RAIN

ABOUT THE AUTHOR

...view details