தமிழ்நாடு

tamil nadu

"பெண்களுக்காக போராடினேன்.. 2032 வரை விளையாடுவேன் என நினைத்தேன்" - மனம் திறந்த வினேஷ் போகத்! - Vinesh Phogat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 7:34 AM IST

vinesh phogat letter: 2032ஆம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று நினைத்திருந்தேன், ஏனென்றால் எனக்குள் மல்யுத்தமும், போராட்ட குணமும் எப்போதும் இருக்கும் என வினேஷ் போகத் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Vinesh Phogat Letter
Vinesh Phogat Letter (Credits - ETV Bharat and Vinesh Phogat X Page)

சண்டிகர்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் வினேஷ் போகத் எதிர்கொண்ட சாவல்கள் குறித்து 3 பக்கம் உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது பயிற்சியாளர், குடும்பத்தார்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு ஒலிம்பிக் குறித்தோ, மல்யுத்த களம் குறித்தோ எதுவுமே தெரியாது. நான் சிறுமியாக இருக்கும் போது எனக்கு நீண்ட முடி வேண்டும் மற்றும் கைகளில் மொபைல் வேண்டும் என்பதே கனவாக இருந்தது. எனது தந்தை சாலையில் சென்றாலும், தனது மகள் விமானத்தில் பறக்க வேண்டும் என்று விரும்பினார். 3 குழந்தைகளில் நான்தான் இளையவள் என்பதால் என்னிடம் அதிக பாசத்தைக் காட்டுவார்.

ஒருநாள் எனது தந்தை எங்களை விட்டு மறைந்து சென்றுவிட்டார். அதேபோல் தந்தை மறைந்த 3 மாதங்களில் அம்மாவுக்கு ஸ்டேஜ் 3 புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அம்மாவின் போராட்ட குணமும், பிடிவாதமும்தான் நான் இந்த நிலையை எட்டியதற்கு முக்கிய காரணம்.

ஒவ்வொரு முறையும் முடிவைப் பற்றிக் கவலைப்படாமல், மல்யுத்தம் செய்வதற்கு அம்மாவின் தைரியமே எனக்கு உதவியாக இருந்தது. அதேபோல்தான் என்னுடைய கணவர் சோம்வீர் ரதி. ஒரு நண்பராகவும், கணவராகவும் எனது ஆசைகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும், ஒரு அரணாக நின்று என்னைப் பாதுகாத்தவர். அவர் இல்லையென்றால் இந்த பயணமே சாத்தியப்பட்டிருக்காது. இந்த பயணத்தில் ஏராளமான நல்ல மனிதர்களையும், சில மோசமானவர்களையும் சந்தித்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் களத்திலும், களத்திற்கு வெளியிலும் ஏராளமான விஷயங்கள் நடந்துவிட்டன.

எனது வாழ்க்கையே மாறிவிட்டது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் தின்ஷா பர்திவாலா, வெய்ன் பாட்ரிக், பயிற்சியாளர் அகோஸ், தஜிந்தர் சிங் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அஸ்வினி ஜீவன் பாட்டில், ஓஜிக்யூ குழுவினர் ஆகிய அனைவருக்கும் நன்றி.

2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கை சவாலானதாக மாறியது. பெண்களின் சுயமரியாதை காக்க போராடினேன். 2023 ஆம் ஆண்டு தேசியக் கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்க்கும் போது சோகமாக இருக்கும். அதே தேசியக் கொடியை ஒலிம்பிக் அரங்கில் உயர பறக்க வைக்க வேண்டும் என விரும்பினேன்.

இது குறித்து நேரம் வரும் போது பேசுகிறோன். ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கடுமையான போராடினோம். ஆனால் காலம் எங்களுக்கு கருணை காட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சாதிக்க வேண்டும் என்று விரும்பியது கனவாகவே கலைந்தது.

2032ஆம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் எனக்குள் மல்யுத்தமும், போராட்ட குணமும் எப்போதும் இருக்கும். எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், நான் எதை நம்புகிறேனோ, அதற்காகவும் சரியான விஷயத்திற்காகவும் நிச்சயம் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தகுதி நீக்கத்துக்கு முதல் நாள் இரவு வினேஷ் போகதுக்கு நடந்தது என்ன? வினேஷ் பயிற்சியாளர் பேஸ்புக் போஸ்ட்டை உடனடியாக அழிக்க என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details