தமிழ்நாடு

tamil nadu

4வது வெற்றியை பதிவு செய்த கோவை கிங்ஸ்.. திருச்சியை வீழ்த்தி அபாரம்! - TNPL 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 7:43 AM IST

Trichy Grand Cholas vs Lyca Kovai Kings: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 15வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 8 விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

இரு அணி வீரர்கள்
இரு அணி வீரர்கள் (Credit - TNPL)

கோயம்புத்தூர்:8வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடரின் 2ம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15வது லீக் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் - ஆண்டனி தாஸ் தலைமையிலான திருச்சி சோலாஸ் அணிகள் மோதின.

125 ரன்கள் இலக்கு:கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய திருச்சி அணி, கோவையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியின் ஓபனிங் பேட்மேன்களான வசீம் அகமது 17 ரன்கள், சுந்தர் 5 ரன்கள் எடுத்து வெளியேற கேப்டன் ஆண்டனி தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அர்ஜுன் மூர்த்தி 3 ரன், நிர்மல் 3 ரன்கள், சரவணகுமார் 1 ரன் என அடுத்துதடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் 9.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது திருச்சி. இதனைத் தொடர்ந்து சஞ்சய் யாதவ் மற்றும் ஜஃபர் ஜமால் ஆகியோர் இனைந்து 56 ரன்கள் சேர்த்தனர். இதில் 27 ரன்கள் எடுத்து இருந்த சஞ்சய் யாதவ், யுதீஸ்வரன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்தது திருச்சி. அதிகபட்சமாக ஜஃபர் ஜமால் 41 ரன்கள் விளாசினார். கோவை அணி தரப்பில் கேப்டன் ஷாருக்கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யுதீஸ்வரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கோவை 4வது வெற்றி:இதனையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு , முதல் ஓவரிலே அதிர்ச்சி அளித்தது திருச்சி. அதிசயராஜ் டேவிட்சன் முதல் ஓவரை வீச, கோவை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான சுரேஷ் குமார் 2 ரன்னுகும், சாய் சுதர்சன் 4 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பிறகு சுஜய் மற்றும் முகிலேஷ் ஆகியோர் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதனால் 16.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கோவை கிங்ஸ். சுஜய் 41 ரன்களுடனும், முகிலேஷ் 61 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

ஆட்டநாயகன்: இந்த போட்டியில் 4 ஓவரை வீசி 13 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

100 சிக்ஸர்கள்:அதே போல் இந்த போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசினார் திருச்சி அணியின் சஞ்சய் யாதவ். இதன் மூலம் டிஎன்பிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வகையில் வீடியோ? யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா மீது போலீசில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details