மும்பை: 8 அணிகள் இடையிலான 9வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதனையடுத்து 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் அணிகளை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தென் ஆப்பிரிக்கா மகளிருக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் 17 பேர் கொண்ட குழுவில் 15 வீராங்கனைகள் அப்படியே ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடருக்கும் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.