சென்னை:நடிகர் விஜய், தமது அரசியல் கட்சியின் பெயரை இன்று (பிப்.2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களது வாழ்த்துக்களையும், வரவேற்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு. நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் அதை முடிவு செய்வார்கள். ஊழல் சீர்கேடுகள் நிறைந்த, மதவாதம் என விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக மற்றும் பாஜகவுக்குதான் பொருந்தும். அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுகவின் ஓட்டுகளை யாரும் பிரிக்க முடியாது. நான் நடிகர் விஜயை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இனிமேல் எம்ஜிஆர் போல ஒருவர் பிறக்க முடியாது.
திமுக என்பது ஒரு தீய சக்தி. அந்த திமுக, தமிழகத்தை கபளீகரம் செய்துவிட்டது. தமிழகத்தை தீய சக்தியிடம் இருந்து மீட்க ஒரு கட்சி தேவை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். இயக்கம் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்தும், தற்போதும் ஓர் எழுச்சியுடன் இருக்கிறது. அவர் போட்ட விதைதான் இன்று ஆலமரமாக பல்வேறு நபர்களுக்கு நிழல் கொடுத்திருக்கிறது. எங்களுடைய இயக்கத்தை மற்ற எந்த இயக்கத்துடனும் ஒப்பிட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அதிமுக நிலைத்து நிற்கும்" என்றார்.
திருமாவளவன்: "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி கருத்து கூறும்போது, நாங்கள் முன்னதாகவே வரவேற்றிருக்கிறோம். ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அதுவே ஜனநாயகம்.