சென்னை:மாறிவரும் வாழ்க்கை முறையால், பலரும் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயினால் உலகம் முழுவதிலும் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1980இல் 108 மில்லியனாக இருந்த நிலையில், 2014இல் 422 மில்லியனாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) தெரிவித்துள்ளது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளை விட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உணவு முறை, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் நீரிழிவு நோயின் விளைவுகளை தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அவற்றில் முக்கியமான ஒன்று உணவு முறையாகும். எந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்?, எந்த உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் குழப்பமடைகின்றனர். குறிப்பாக எந்தெந்த பழங்களை உட்கொள்ளலாம். எந்தெந்த பழங்களை உட்கொள்ளக்கூடாது என்பதில் இந்த குழப்பம் அதிகமாகவே உள்ளது. தனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் எந்த பழங்களையும் உட்கொள்ளக்கூடாது என சிலர் கருதுகின்றனர்.
இந்த குழப்பத்தைப்போக்க நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த பழங்களை உட்கொள்ளலாம் என வழிகாட்டுகின்றனர் நிபுணர்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை உண்ண வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
இத்தன்மை கொண்ட நீரிழிவு நோயாளிகள் உண்ணக்கூடிய 10 பழங்களை பார்க்கலாம்.
ஆப்பிள்:ஆப்பிளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள்கள் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.