தமிழ்நாடு

tamil nadu

"கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க" - நடிகர் பார்த்திபன் ஆதங்கத்தின் பின்னணி என்ன? - Parthiban talk about Indian 2

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 1:37 PM IST

Indian 2 controversy talk by Actor Parthiban: மெய் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன், இந்தியன் 2 ரிசல்ட் சரியாக இல்லாததால் நான் பார்க்கவில்லை என சொல்லவில்லை எனவும், இணையத்தில் முகமே தெரியாத நபர்கள் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க எனவும் தெரிவித்தார்.

நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மெய் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் 2ம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மற்றும் வசந்தபாலன் டீன்ஸ் (TEENZ) படக்குழுவுடன் கலந்து கொண்டனர். பின்னர், டீன்ஸ் மற்றும் ஜமா திரைப்படங்களின் முன்னோட்டம் திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறந்த படத்திற்கான மெய் விருது ரா.வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த கிடா திரைப்படத்திற்கும், சிறந்த பட தொகுப்பாளர் விருது யாத்திசை திரைப்பட விஷுவல் எடிட்டர் மகேந்திரன் கணேசனுக்கும், சிறந்த நடிகர் விருது விடுதலை திரைப்பட நடிகர் சேத்தனுக்கும், துணை நடிகர் விருது பாக்கியம் சங்கருக்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது அம்மு அபிராமிக்கும் பார்த்திபன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அபிராமி, "கலை என்கிற கதாபாத்திரம் எல்லா பெண்களின் வாழ்க்கைகளிலும் இருக்கிறது என நம்புகிறேன். அந்த கதாபாத்திரத்திற்கு பார்த்திபனின் கரங்களால் வாங்கிய விருது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

பின்னர் சிறந்த இயக்குநருக்கான விருது 'கூழாங்கல்' திரைப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜ்-க்கு வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய அவர், "கூழாங்கல் 2019 ஆண்டு வெளியானது. ஆனால், அதற்கு 2024ஆம் ஆண்டு விருது கிடைப்பது பெரிய விஷயம்தான். இதுவரையில் மக்கள் நினைவு வைத்திருப்பதை மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து மேடையில் பேசிய நடிகர் பார்த்திபன், "விருது என்பது முத்தம் போன்றது. அதை வாங்குபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் தற்போது விருது கொடுத்த எனக்கு சந்தோஷமாக உள்ளது. விருதை வாங்கியவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். சமீபத்தில் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தது டீன்ஸ் (TEENZ) திரைப்படம் தான். எல்லாரும் ஒரு பேயை வைத்து படம் பண்ணுவார்கள், ஆனால் நான் 13 பேய்களை வைத்து படம் செய்துள்ளேன்.

பொதுவாக மக்கள் பெரிய நடிகர்களின் படங்களைப் பார்க்க முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால், நான் பெரிய நடிகர்களை உருவாக்கும் படங்களை இயக்குகிறேன். நிச்சயமாக இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் பெரிய நடிகர்களாக வருவார்கள். மிகப்பெரிய படம் என்பது திரைத்துறைக்குத் தேவையான விசயம்தான். ஆனால், கூழாங்கல், ஜமா, டீன்ஸ் மாதிரியான படங்கள் தான் சினிமாவை வாழ வைக்கிறது.

டீன்ஸ் போன்ற கதைகளை ஏன் பெரிய புரொடெக்சன் நிறுவனங்கள் தேர்வு செய்வதில்லை என்ற செய்தியாளரின் கேள்விக்கு, உங்களுக்கு என்னுடைய படங்கள் முன்மாதிரியாக இருப்பது என்பது மிகவும் மகிழ்ச்சி. அதைத் தான் நானும் எதிர்பார்க்கின்றேன். சினிமாவுக்கு வந்தோம் சம்பாதித்தோம் போனோம் என இல்லாமல், கடைசி வரைக்கும் சினிமாவை லவ் பண்ணுவது என்பது கஷ்டமான விசயம். சினிமா பல நேரங்களில் என்னைக் கைவிட்டாலும், நான் விடமாட்டேன். தொடர்ந்து காதலிப்பேன்.

டீன்ஸ் படத்திற்கு முதல் நாளில் கிடைக்காத வரவேற்பு அடுத்தடுத்து கிடைத்துள்ளது. முதலில் 100 திரையரங்குகளில் தான் கிடைத்தது. ஆனால், இன்று 190க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போதெல்லாம் படத்தை வெளியிடுவது என்பதே கஷ்டமான விசயம். ஆனால் நான் இந்தியன் 2 உடன் வெளியிட்டேன். கமல் என்றால், சினிமா என்றால் 3 எழுத்து. சினிமா என்றால் கமல் தான். தமிழ் சினிமாவில் முதன்முதலில் பிரமாண்டத்தைக் கொண்டு வந்ததே இயக்குநர் சங்கர் தான்.

மேலும், லைகா போன்ற நிறுவனங்களால் தான் இதுபோன்ற படங்களை தயாரிக்க முடியும். அப்படிப்பட்டவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், சினிமா என்று வரும் போது, அவர்கள் கிரிக்கெட் ஆடினால், நான் கில்லி தாண்டு விளையாடுவேன். இதில் எந்தவித ஒப்பீடும் கிடையாது. ஆனால், செய்தியாளர்கள் எழுதும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

ஏனென்றால், நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் சொல்லும் பதிலில் பாதியை மட்டும் எடுத்துப் போடுவதால் பாதிப்பு எனக்குத்தான். உதாரணமாக, இந்தியன் 2 படம் பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு, டீன்ஸ் படம் வெற்றிப்படமாக வந்திருந்தால், அந்த சந்தோசத்தைக் கொண்டாட அன்று மாலையே இந்தியன் 2 படத்தைதான் பார்த்திருப்பேன். என் படத்திற்கான ரிசல்ட் சரியாக இல்லை என்பதால், நான் தியேட்டர் தியேட்டராக ஓடிக்கொண்டிருக்கின்றேன். அதனால், என்னால் இந்தியன் 2 பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தேன்.

ஆனால், வெளியான செய்திகளில் இந்தியன் 2 ரிசல்ட் சரியாக இல்லாததால் நான் பார்க்கவில்லை என எழுதியுள்ளனர். அதைத் தொடர்ந்து, இணையத்தில் முகமே தெரியாத நபர்கள் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க.. டீன்ஸ் ரிலீசுக்கு பின்னர் எனக்கு தூக்கமே கிடையாது. இதற்கிடையே, நாம் எப்போது கமலை தப்பாக சொன்னோன். இந்தியன் 2 படத்தை எப்படி தப்பாகச் சொல்வோம் என உருத்தல்கள் இருந்தது.

முன்னதாக இந்தியன் 2 குறித்து பார்த்திபன் பேசியதாவது, "இந்தியன் 2 படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தால் அன்று இரவே பார்த்திருப்பேன். பயங்கர ஆர்வமாக உள்ளேன். ஆனால், நிச்சயம் படத்தை பார்ப்பேன்" எனத் தெரிவித்திருந்தார்

அரண்மனை, இந்தியன் 2, கருடன் போன்ற அனைத்து படங்களும் திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடும் பொழுது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். ஜமா போன்ற படங்கள் ஓடும் பொழுது தான் சினிமா வேறு தளத்திற்கு நகரும் என்பது எனது நம்பிக்கை. மேலும், விருதை முத்தத்துடன் ஒப்பிட்டு பேசியது, ரசிக்கும் படியாக இருக்கும் என்பதற்காகவே தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "என்னை குறை சொல்லுபவர்களை 'வாழை' திரும்பிப் பார்க்க வைக்கும்" - மனம் திறந்த மாரி செல்வராஜ்

ABOUT THE AUTHOR

...view details