தமிழ்நாடு

tamil nadu

"எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் தியேட்டர்கள் கிடைப்பதில்லை" - இயக்குநர் அமீர் ஆதங்கம்! - Film Editors Association Meeting

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 4:06 PM IST

Director Ameer: வருடத்திற்கு 250 படங்கள் உருவாகின்றன. ரசிகர்கள் எவ்வளவு படங்களைப் பார்ப்பார்கள்? எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்று திரைப்பட எடிட்டர்கள் சங்க விழாவில் இயக்குநர் அமீர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அமீர்
இயக்குனர் அமீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திரைப்பட எடிட்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், உதயகுமார்; நடிகர்கள் இளவரசு, சிங்கம் புலி மற்றும் நடிகைகள் தேவயானி, இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் அமீர் பேசுகையில், "ஒரு இயக்குநருக்குப் படத்தொகுப்பு மட்டுமல்ல, இசை, சண்டை, எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு படம் தேறுமா, தேறாதா என்று கண்டுபிடிப்பது எடிட்டர் தான். தன்னுடைய காதலியுடன் தனி அறையில் உட்கார்ந்து பேசும்போது எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ? அவ்வளவு சந்தோசம், எடிட்டிங் ரூமில் இருக்கும்போது ஒரு இயக்குநருக்கு கிடைக்கும். எடிட்டர்கள் படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்.

படம் தேறுமா தேறாதா என்பது முக்கியமல்ல. எடிட்டர்கள் அந்தப் படத்தை தேற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. சங்கங்களில் உள்ள பிரச்சனையே முதலில் இந்த நிர்வாகம் சரியில்லை என்று கூறுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, என்னை தாலிபான்களுடன் தொடர்புடையவன் என்று கிளப்பி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடக்கும்போது கத்தி மேல் நிற்பது போன்றுதான் இருக்கும். அதை சமாளிக்க ஒரு திறமை வேண்டும். எல்லோராலும் பேசியதை செய்துவிட முடியாது. தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது. இந்த நிலையில் சங்கத்தை காப்பாற்றுவதாக பேசுகிறார்கள்.

வருடத்திற்கு 250 படங்கள் உருவாகின்றன. ரசிகர்கள் எவ்வளவு படங்களைப் பார்ப்பார்கள்? இரண்டு வருடங்கள் பார்ப்பேன்; இந்த நிலை சரியாகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களைப் பிடித்துப் படமெடுத்துக்கொண்டு அங்கேயே இருந்து விடுவேன். எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

க்யூப் நிறுவனம் தொடங்கும்போது நம்மிடம் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடிவதில்லை. மேலும், தனித்தனி முதலாளிகளின் கையில் சினிமா மாட்டியுள்ளது. அதை முதலில் காப்பாற்ற வேண்டும்" என்று அமீர் கூறினார்.

இதையும் படிங்க:அவர் பாதையில்.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்!

ABOUT THE AUTHOR

...view details