நாராயன்பூர்:சத்தீஸ்கரின் நாராயண்பூர் - காங்கர் மாவட்ட எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து அபுஜ்மத் வனத்தில் உள்ள டெக்மேட்டா, காக்கூர் பகுதிகளில் இன்று (ஏப்.30) காலை 6 மணி அளவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் நக்சலைட்டுகளுக்கு எதிராக சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதிரடி படையினரின் என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்க்கப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றி தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாராயண்பூர் மாவட்ட ஐஜி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47 துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.