புதுடெல்லி:இந்திய ரயில்வேயின் சமீபத்திய செலவின அறிக்கையின்படி நடப்பு நிதி ஆண்டில் ரயில்வே தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76 சதவீதத்தை முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் 4 நாட்களில் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2025-ம் ஆண்டு ஜனவரி 5 வரை இந்திய ரயில்வேயின் சமீபத்திய செலவின அறிக்கையின்படி, "திறன் மேம்பாட்டில்தான் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ரயில் பயணத்தை நாட்டில் உலகத் தரம் வாய்ந்த அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் ரயில்வேக்கான மொத்த மூலதன செலவு ரூ.2,65,200 கோடியாகவும் மொத்த பட்ஜெட் ஆதரவு ரூ .2,52,200 கோடியாகவும் உள்ளது. இதில் ரூ.192,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரயில்பெட்டிகளைப் பொறுத்தவரை பட்ஜெட்டில் ரூ.50,903 கோடி ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காக, வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடான ரூ34,412 கோடியில், ரூ.28,281 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இது ஒதுக்கப்பட்ட தொகையில் 82 சதவீதமாகும். இந்திய ரயில்வேயை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இது நாள்தோறும் சராசரியாக 2.3 கோடி இந்தியர்களை நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது. 136 வந்தே பாரத் ரயில்கள், அகல ரயில்பாதையில் 97 சதவீதம் மின்மயமாக்கல், புதிய வழித்தடங்களை அமைத்தல், பாதை மாற்றம், இரட்டிப்பாக்குதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்தில் முதலீடு போன்றவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியான மூலதன செலவினத்தின் பலன்களை இப்போது காண முடிகிறது.