தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழில்துறையின் ஜாம்பவான் ரத்தன் டாடா மறைவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்!

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 8:08 AM IST

ரத்தன் டாடா, திரௌபதி முர்மு, மோடி
ரத்தன் டாடா, திரௌபதி முர்மு, மோடி (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: பிரபல தொழிலதிபரும், நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா(86), உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11.30 மணியளவில் ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "ரத்தன் டாடாவின் மறைவு கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. ரத்தன் டாடா பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றவர். டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு எடுத்துச் சென்றார். மேலும், அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர். தொண்டு, சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது.

தற்போது அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மறைந்தது இந்தியத் தொழில்துறையின் முகம்..தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

பிரதமர் நரேந்திர மோடி அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர், இரக்கமுள்ள ஆன்மா மற்றும் ஒரு அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான மற்றும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனத்திற்கு நிலையான தலைமையை வழங்கினார். அதே நேரத்தில், அவரது பங்களிப்பு மகத்தானது. தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தைச் சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்றவற்றால் பலரால் நேசிக்கப்பட்டவர்" எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். வணிகம் மற்றும் உதவி செய்தல் ஆகிய இரண்டிலும் நீடித்த முத்திரையைப் பதித்துள்ளார் ரத்தன் டாடா. தற்போது அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "ரத்தன் டாடாவின் மறைவில் இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். டாடாவின் அர்ப்பணிப்பு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகமாகவும், அடையாளமாகவும் இருந்தார். மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார்" எனப் பதிவிட்டுள்ளார்.

'இனி அவர் இல்லாதபோதும்': முன்னதாக, ரத்தன் டாடாவின் மறைவையொட்டி அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ' "ரத்தன் டாடாவை போற்றும் அனைவரின் அன்பும் மரியாதையும் வெளிப்படுவதில் அவரது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர் ஆகிய நாங்கள் ஆறுதல் பெறுகிறோம். அவர் இனி எங்களுடன் இல்லாதபோதும், ​​அவருடைய வாழ்க்கை வருங்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details