ஸ்ரீநகர்:வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் கூட்டத்தில் ஒமர் அப்துல்லா அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக அவர் தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அவர் விரைவில் முதமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு வழிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இதில் பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா, "தேசிய மாநாட்டு கட்சியுடன் மக்களுடன் இருக்கின்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார்" என தெரிவித்தார். இந்தநிலையில் ஸ்ரீநகரில் உள்ள நவா-இ-சுபா வளாகத்தில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஃபரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பங்கேற்றனர்.