தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூணாறு: நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மாணவர்களின் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து; மூவர் உயிரிழப்பு! - SCOTT CHRISTIAN COLLEGE ACCIDENT

கேரளா மாநிலம் மூணாறுக்குச் சுற்றுலா சென்ற நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மாணவர்களின் பேருந்து விபத்துக்குள்ளாகி மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாகர்கோவின் ஸ்காட் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி இருக்கும் புகைப்படம்
நாகர்கோவின் ஸ்காட் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி இருக்கும் புகைப்படம் (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 4:18 PM IST

இடுக்கி / கேரளா:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மலைப் பகுதிக்குட்பட்ட இடத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டுப்பெட்டி எனும் இடத்தின் எகோ பாயிண்ட் சாலை வளைவில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி’யைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு மூணாறு காவல்துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எகோ பாயின்ட் சாலை வளைவில், முன்னே சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை அருகே கவிழ்ந்ததாக பேருந்தில் இருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குண்டலா அணையை பார்க்க போகும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. மொத்தம் 40 பேருடன் சென்ற பேருந்தில் இருந்த 15 பேர் காயங்களுடன் மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஆசிரியை வேணிகா (இடது), ஆதிகா (வலது) ஆகியோரின் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

இந்த விபத்தில் ஒரு மாணவி உள்பட ஆசிரியை உயிரிழந்ததாக மூணாறு காவல்துறை உறுதி செய்துள்ளது. அவர்கள் வேணிகா என்ற ஆசிரியரும், ஆதிகா என்ற கல்லூரி மாணவியும் என்பது தெரியவந்துள்ளது. விபத்துக்கு அதிவேகமே காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 15 பேர் மூணார் பகுதியில் உள்ள டாடா பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த ஏமி கார்மைக்கேல்! நாடகத்தால் கண்முன் கொண்டு வந்த மாணவிகள்!

அவர்களில் படுகாயமடைந்த 4 பேரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், கோலஞ்சேரி, கோட்டயம் உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மாணவன் சுதன் (19) (ETV Bharat Tamil Nadu)

தற்போது கிடைத்த தகவலின்படி, சுதன் (19) என்ற மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாடா பொது மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த இரங்கல்:
இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கேரளா மாநிலம் மூணாறுக்கு கல்விச் சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சம்பவ இடத்தில் இருவரும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 1 மாணவரும் உயிரிழந்தார்கள் என்ற செய்தி மனதை உலுக்கியது. அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

சம்பவம் குறித்து அறிந்த உடன் கேரளா மாநிலம் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மூலமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. மணி, மூணாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜாவையும் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டேன். அங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் நலன் குறித்து விசாரித்தேன்.

பலத்த காயமடைந்த மாணவர்களை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு செய்யவேண்டிய உதவிகள் செய்ய கேட்டுக்கொண்டேன். மருத்துவமனை உயர் மருத்துவர்களிடமும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டுள்ளேன்.

மேலும் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வசந்த் அண்ட் கோ ஊழியர்கள் ஆகியோர் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.

ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி தாளாளர் அவர்களையும் தொடர்பு கொண்டு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்துள்ளேன். காயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details