டெல்லி:இந்திய கடற்படைக்கு ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் அரசு மற்றும் டஸ்சால்ட் ஏவியேஷன் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 26 ரபேல் விமானங்களை இந்திய கடற்படைக்காக கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பிரான்ஸ் அதிகாரிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 30ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரான்ஸ் அதிகாரிகள் இந்தியா வர இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அலோசனைக் கூட்டத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட உள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை வாங்கும் கொள்முதல் இயக்குநரகம் இது குறித்து பேச்சுவார்த்தையி ஈடுபடுகிறது. இந்த கூட்டத்தில் ரபேல் விமானத்தின் விலை மற்றும் கொள்முதல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.