தமிழ்நாடு

tamil nadu

ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய திருவிழாவில் பட்டாசு விபத்து: 3 பேர் பலி.. 30 பேர் படுகாயம்! - Puri Jagannath temple accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 2:40 PM IST

ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய சந்தன் யாத்ரா விழாவின் போது பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் வரை படுகாயம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Lord Jagannath temple in Puri (File)

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் சந்தன் யாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (மே.29) இரவு திருவிழா நிகழ்வுகளை காண, நரேந்திர புஷ்கரணி கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, திருவிழாவில் ஒரு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் பட்டாசுகளை கொளுத்தி கொண்டாடினர்.

இதில் எதிர்பாராதவிதமாக எரிந்த பட்டாசு துண்டு ஒன்று, அங்கிருந்த பட்டாசு குவியலில் விழுந்து வெடிக்கத் தொடங்கியது. இதில், அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அப்போது பட்டாசுகள் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் விழுந்ததால் பலர் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கியும், பட்டாசு வெடிப்பிலும் பொது மக்கள் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

பட்டாசு வெடித்து சிதறிய போது சிலர் தப்பிப்பதற்காக அங்கிருந்த நீர்நிலைகளில் குதித்ததாக போலீசார் தெரிவித்தனர். பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் 30 பேர் வரை படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த மக்கள், மாவட்ட அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சை பெறுவபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், வருத்தம் தெரிவித்து உள்ளார்.

மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயாக் உத்தரவிட்டார். சிகிச்சைக்கான செலவு முதலமைச்சரின் நிவாரண நிதியால் இருந்து அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நாட்டின் முதல் 3டி பிரின்டட் செமி கிரியோஜெனிக் ராக்கெட் சோதனை வெற்றி! சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம் அபாரம்! - Agnibaan Rocket Launch

ABOUT THE AUTHOR

...view details