புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது.
டெல்லியில் தமிழர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 12 லட்சம் தமிழர்கள் வசிப்பதாக அங்குள்ள தமிழ் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இருப்பினும், 10 தொகுதிகளில் தமிழர்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர்.
வஜிர்பூர், கரோல் பாக், விகாஸ்புரி, துவாரகா, ரஜீந்தர் நகர், ஆர்.கே.புரம், பதர்பூர், திருலோக்புரி, பட்பர்கன்ஞ் மற்றும் லெட்சுமி நகர் ஆகிய 10 தொகுதிகளில் தமிழர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தொகுதிகளில் வெற்றி யாருக்கு என்பது குறித்து பார்க்கலாம்.
1) வஜிர்பூர் தொகுதி -பாஜக வெற்றி
வடக்கு டெல்லியில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று வஜிர்பூர். டெல்லியின் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பூணம் சர்மா 54,721 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜேஷ் குப்தாவை விட 11,425 வாக்குகள் அதிகம் பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜேஷ் குப்தா 43,296 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ராகிணி நாயக் 6348 வாக்குகளும் மட்டுமே பெற்றனர்.
2) ரஜிந்தர் நகர் தொகுதி - 1231 வாக்குகளில் பாஜக வெற்றி
டெல்லின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரஜிந்தர் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமாங் பஜாஜ் வெற்றி பெற்றார். 46,671 வாக்குகள் பெற்ற இவர், ஆம் ஆத்மி வேட்பாளர் துர்கேஷ் பதக்கை 1,231 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். துர்கேஷ் பதக்கிற்கு 45,440 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினீத் யாதவ் 4015 வாக்குகள் பெற்றார்.
3) பத்பர்கன்ஞ் தொகுதி - பாஜக அமோக வெற்றி
பத்பர்கன்ஞ் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நேகி அமோக வெற்றி பெற்றார். இவர் ஆம் ஆத்மி வேட்பாளரை விட 28,072 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ரவீந்தர் சிங் நேகிக்கு 74,060 வாக்குகளும், ஆம் ஆத்மியின் அவாத் ஓஜாவுக்கு 45988 வாக்குகளும், காங்கிரஸின் அனில் சௌத்ரிக்கு 16549 வாக்குகளும் கிடைத்தன.
4) லக்ஷ்மி நகர் தொகுதி - பாஜக வெற்றி
கிழக்கு டெல்லியில் உள்ள லக்ஷ்மி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அபய் வர்மா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பி.பி.தியாகியை 11,542 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவருக்கு 65858 வாக்குகள் கிடைத்தன. பி.பி.தியாகிக்கு 54316 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சுமித் சர்மாவுக்கு 4316 வாக்குகளும் கிடைத்தன.