புதுடெல்லி:மக்களவை குளிர்காலக்கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கும் முன்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரண்டு மசோதாக்களை 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அமளிக்கு இடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரண்டு மசோதாக்களை கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டுக்குழுவில் மக்களவையை சேர்ந்த 27 உறுப்பினர்களும், மாநிலங்களவையை சேர்ந்த 12 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிபி சவுத்திரி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.