அமராவதி:ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக சந்திரபாபு நாடு பொறுப்பெற்றுள்ளார். இவர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, ஆந்திர மாநிலம் சாந்திபுரம் மண்டலம் கடப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சிவபுரத்தில் நிலம் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் வீடு கட்ட நில பயன்பாட்டு மாற்றத்திற்கு தெலுங்கு தேசம் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நிலத்தை பிரித்து தரும்படி நிலஅளவைத் துறையிடம் கேட்ட போது, துணை சர்வேயர் சதாம் உசேன் 1.80 இலட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் துணை சர்வேயரிடம் அந்த தொகையை கொடுத்த பின்னர், அடுத்தடுத்த பணிகள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் குப்பம் விருந்தினர் மாளிகையில் உள்ளூர் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தயின் போது, இவ்விவகாரம் விவாதத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் சுமித் குமார் மற்றும் இணை ஆட்சியர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் கேட்ட போது துணை சர்வேயர் லஞ்சம் வாங்கியது வெளிச்சத்திற்கு வந்தது.