நள்ளிரவில் மளிகை கடை பூட்டை உடைத்த கரடி - வைரலாகும் வீடியோ! - etvbharat tamil
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18222154-thumbnail-16x9-bear.jpg)
நீலகிரி: குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாகக் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் காவல் நிலையம் முன் உள்ள மளிகைக் கடைக்கு வந்த கரடி பூட்டை உடைக்க முற்பட்ட போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் நீண்ட நேரம் கரடி கடையைத் திறக்க முயற்சிப்பதும், பின்பு மனிதர்கள் நிற்பதைப் போல் நின்று கடையைத் திறப்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அப்போது கரடியைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் ஒட்டம் பிடித்துள்ளனர்.
இதனிடையே குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கோத்தகிரி பகுதியில் சுற்றித்திரிந்த கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டது குறிப்பிடத்தக்கது.