Published : Sep 27, 2023, 3:41 PM IST
அரசு மருத்துவமனை ஆய்வின்போது திறக்காத புகார் பெட்டியால் அப்செட்டான அமைச்சர் உதயநிதி!
தருமபுரியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று திமுக கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று காலை காரிமங்கலம் அருகே நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியை திறக்குமாறு அதிகாரிகளிடம் கூறி உள்ளார். புகார் பெட்டி பல மாதங்களாக திறக்கப்படாமல் துருப்பிடித்து இருந்ததால், அதிகாரிகள் சாவி கொண்டு பூட்டைத் திறக்க முடியாமல் திணறினர்.
பின்னர், சுவற்றில் இருந்த புகார் பெட்டியை கீழே இறக்கி ஒரு வழியாக அதிகாரிகள் திறந்தனர். அதிகாரிகள் புகார் பெட்டியை திறக்க முடியாமல் திணறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட் நகர்திறன் பூங்கா அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.