திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்!
Published : Nov 25, 2023, 11:39 AM IST
தஞ்சாவூர்: திங்களூர் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில், (சந்திர தோஷ பரிகார கோயிலாக கருதப்படுகிறது) கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (நவ.24) வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை மாவட்டம் திங்களூரில், நவக்கிரஹ பரிகாரத் தலங்களில் ஒன்றான அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனையடுத்து, கடந்த நவம்பர் 22ஆம் தேதி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று நேற்று, நான்காம் கால யாகபூஜை பூரணாஹதியுடன் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து, யாகசாலையிலிருந்து கலச நீரானது, சிவாச்சாரியார்கள் செண்டை மேளம் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோபுர கலசங்களுக்கு எடுத்து வந்தனர். பின்னர் ராஜகோபுரம், விமான கோபுரம், பரிவார தெய்வங்கள் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கலச நீரை கோபுர கலசங்களில் ஊற்றி, குடமுழுக்கு செய்து மகாதீபாராதனை காண்பித்தனர்.
இந்நிலையில், இக்கோயில் குடமுழக்கு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா, தனது குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் மகன்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கோயிலுக்கு திங்களுர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.