தூய்மைப் பணியாளர் பற்றாக்குறை: மகன்களுடன் குப்பை அள்ளிய பெண் கவுன்சிலர்! - etv bharat tamil
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-07-2023/640-480-19099268-thumbnail-16x9-counciler.jpg)
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதற்கு தலைவராக மெஹரீ பாபர்வீன், துணைத் தலைவராக அருள் வடிவு ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டில் திமுக நகரச் செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத் பேகம் வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல், குடிநீர் விநியோகம் முறையாக வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து தரக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் வார்டு கவுன்சிலர் ஜம்ரூத்பேகம் பல முறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், நகராட்சித் தலைவர் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே இவரது வார்டில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் வரவில்லை என்பதால், வார்டு பகுதியில் உள்ள மக்கள் இவரது வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜம்ரூத் பேகம், அவரது மகன்களுடன் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஒரு வார்டு கவுன்சிலர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எடுக்காததால் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பைகளை எடுத்ததை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.