கொடைக்கானல் சுற்றுலா செல்ல ரெடியா?.. சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு - வனத்துறை கொடுத்த சூப்பர் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 10:56 AM IST

thumbnail

திண்டுக்கல்: தென் தமிழகத்தில், கொடைக்கானல் மலைப்பகுதி முக்கிய சுற்றுலா தலமாக காணப்படுகிறது. கொடைக்கானலில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதிகளுக்குள் செல்வதற்கு வனத்துறையினரிடம் நுழைவு கட்டணம் பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது மட்டுமில்லாமல், பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும். பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மோயர் சதுக்கம் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள கடைகளை சேதப்படுத்தின. இதன் காரணமாக கொடைக்கானல் சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யானைகளை கண்காணித்து விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதனிடையில் யானைகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் இடம் பெயர்ந்தன. இதனால் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு, செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த அறிவிப்பை கேட்டு மகிழ்வடைந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு போடப்பட்ட தடையானது நீடித்து வருகிறது. இருப்பினும், மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் போன்ற தலங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.