காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ரூ.1 - நெல்லை மாநகராட்சியின் திட்டம்!
திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், நெகிழி இல்லா மாநகராட்சியை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாநகராட்சியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவவின்படி, பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் முதல் முறையாக தச்சநல்லூர் மண்டலத்தில் காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் இன்று (மார்ச் 23) தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி டவுன் சுகாதார அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 1 ரூபாய் வழங்கும் திட்டத்தை சுகாதார ஆய்வாளர் இளங்கோ தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்தத் திட்டத்தை நெல்லை மாநகராட்சி பகுதிகளில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் முதல் நாளிலேயே பொதுமக்கள் ஆர்வம் உடன் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து 1 ரூபாய் பெற்றுச் சென்றனர். இதன் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்து பிளாஸ்டிக் ஒழியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.