குன்னூர் - மேட்டுபாளையம் மலை ரயில் சேவை 2வது நாளாக ரத்து! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
Published : Nov 5, 2023, 10:52 AM IST
நீலகிரி: கடந்த நவம்பர் 3ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்தது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவுபெறாத நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலானது மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னுருக்கு இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து உள்ள இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அலாதி பிரியம் கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக் கொட்டி வரும் கனமழை காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை சேதம் அடைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலை ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதன் காரணமாக மலை ரயில் போக்குவரத்து தொடர்ந்து 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் மலை ரயில் பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகள் விரைவில் அகற்றப்பட்டு மலை ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்து உள்ளனர்.