'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்யாமல் தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்குகிறது திமுக - சீமான்
சென்னை: அயோத்திதாசப் பண்டிதரின் 109ஆவது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழ்நாட்டிற்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த பெருமையும் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் வரலாற்று போராளிகளின் பெயர்களை மறைத்து, இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து தமிழர்களின் பெருமையும், தனிச்சிறப்பும் திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு வருகிறது. சமாதி கட்டுவது, பேனா வைப்பது, பள்ளிக்கூடங்களை சீரமைக்க மக்களிடம் கையேந்துவது இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் விவகாரத்தில் கவர்னர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் வெளியாகி உள்ள ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய கேட்டுக்கொண்டிருக்கிறோம். ’தி கேரளா ஸ்டோரி’ வெளியிடும் திரையரங்கிற்கு எதற்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்? சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, அவர்களுக்கு எதிராக வெளியான படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
திரையரங்கு முன் போராடினால் தமிழ்நாடு அரசால் என்ன செய்ய முடியும். பாஜகவின் வளர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முக்கியப்பங்கு உள்ளது. ஒன்றுமே இல்லாத பாஜகவை ஒற்றுமையாக்கியது, திமுக.
எச் ராஜா, லட்சுமணன் போன்றவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியது திமுக தான். தொழிலாளர் நலச் சட்டத்தை அவசர அவசரமாக திமுக கொண்டு வந்ததன் காரணம் என்ன? பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட கொண்டு வரவில்லை. அவசர அவசரமாக சட்டத்தைக் கொண்டு வந்து பின்னர் திரும்ப பெற்றது ஏன்?'' எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 'ஆளுநர் 356ஆவது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும்' - ஜெயக்குமார்