நெல்லையில் கொட்டித்தீர்த்த மழை.. வேரோடு சரிந்த பழமையான வாகை மரம்! - வாகை மரம்
🎬 Watch Now: Feature Video


Published : Nov 9, 2023, 4:05 PM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலை ஓரம் இருந்த பழமையான மரம் சாலையில் வேரோடு சரிந்து விழுந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் எதிரொலியாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று விடிய விடிய மழை பெய்தது. சில இடங்களில் மிக கனமழையும் கொட்டியது.
மாநகரிலும் இரவு முழுவதும் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதற்கிடையில், நெல்லை டவுன் குறுக்குத்துறை சாலையில் அமைந்துள்ள பழமையான வாகை மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சந்திப்பு போலீசார், சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். மேலும் மரம் விழுந்த பகுதியில் மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளதால், பாதுகாப்பு கருதி மின்சாரத் துறையினர் அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்தனர்.
சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்கான பணிகளில் மாநகராட்சி நிர்வாகம், தீயணைப்புத் துறை ஆகியோருடன் இணைந்து போலீசாரும் ஈடுபட்டனர். மேலும், நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 140 மில்லி மீட்டர் மழையும், களக்காட்டில் 65 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணைப் பகுதியில் 52 மி.மீ மழை அளவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.