பெயிண்ட் டப்பாவில் சிக்கிய நல்ல பாம்பு - 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட காட்சிகள்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி தோணித்துறையைச் சேர்ந்தவர் இந்துமதி. இவரது வீட்டின் பின்புறத்தில் கடந்த மூன்று நாட்களாக நல்ல பாம்பு வேலி ஓரம் கிடந்துள்ளது. ஆனால், பாம்பு சென்று விடும் என இருந்த இந்துமதி குடும்பத்தினர், மூன்று நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருப்பதை பார்த்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது நல்ல பாம்பின் தலையில் சிறிய பெயிண்ட் டப்பா மாட்டிக்கொண்டதும், அதனால்தான் அந்த பாம்பு அந்த இடத்தினை விட்டு செல்ல முடியாமல் அங்கேயே சுழன்று கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. உடனே இது குறித்து, சீர்காழியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் புளிச்சக்காடு தினேஷ் என்பவருக்கு இந்துமதி குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற தினேஷ், பெயிண்ட் டப்பாவில் தலை சிக்கி போராடிக் கொண்டிருந்த பாம்பினை லாவகமாக பிடித்து சுமார் அரை மணி நேரம் போராடி, பாம்பு தலையில் இருந்த டப்பாவினை லாவகமாக அதற்கு காயம் ஏற்படாதவாறு அறுத்து அகற்றி உள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பினை கொண்டு விட்டுள்ளார்.