தேனியில் 300 ஆண்டு பழமையான ஆலமரத்தில் பற்றி எரிந்த தீ! - தேனி பெரியகுளம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18213923-thumbnail-16x9-the.jpg)
தேனி: பெரியகுளம் தென்கரை சோத்துப்பாறை அணை சாலையில் நந்தவனம் என்னும் இடத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் உள்ளது. இந்நிலையில் இந்த ஆலமரத்தின் உட்பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை அடுத்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுத் தீயணைப்புத் துறையினர் மாலை முதல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீயினால் ஆலமரத்தின் மிக உயரமான பகுதி முழுவதும் எரிந்ததால் இரவு 12 மணி வரை தீயை அணைக்க முயன்ற போதிலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ஆறு மணி முதல் மீண்டும் ஆலமரத்தில் பற்றிய தீயை மரத்தின் மீது ஏறி நீரைப் பாய்ச்சி அடித்துக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
ஆலமரத்தில் பற்றிய தீயை 9 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரத்தில் தீ பற்றியது எப்படி? யாரேனும் மரத்தைச் சேதப்படுத்த தீ பற்ற வைத்துள்ளார்களா என காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். பழமை வாய்ந்த ஆலமரத்தில் தீ பற்றி எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.