சென்னை: புற்று நோய்க்கும், ரோஜாக்களுக்கும் என்ன தொடர்பு.? ரோஜா தினத்தை ஏன் புற்று நோயாளிகளுக்கான ஒரு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனத் தோன்றலாம். அவை இரண்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியவர் 15 வயது சிறுமி மெலிண்டா ரோஸ். கனடாவைச் சேர்ந்த இவர் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி உயிரிழந்தார்.
1994 ஆம் ஆண்டு அஸ்கின்ஸ் ட்யூமர் என்ற அரிய வகை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்னும் இரண்டு வாரங்கள்தான் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தனது தன்நம்பிக்கை மற்றும் மன தைரியம் காரணமாகவும், நோய் கண்டறியப்பட்ட பிறகு அவர் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியின் தருணங்களாக அவர் மாற்றிக்கொண்டதாலும் அவரின் ஆயுட்காலம் இரண்டு வாரம் என்பது இரண்டு வருடங்களாக நீண்டது.
இதையும் படிங்க: புற்று நோயாளிகள் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன?.. ஆய்வில் வெளியான தகவல்.!
அந்த இரண்டு வருடத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கைதான்.. இன்றும் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இறந்து விடுவோம் என்ற தெரிந்த நபரின் மனநிலை எப்படி இருக்கும் சிந்தித்துப் பாருங்கள். பயம், பதட்டம், மன அழுத்தம், வாடிய முகம், அழுகை என வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறி விடும்.
ஆனால் இதை அத்தனையும் முறியடித்தார் மெலிண்டா ரோஸ். சிரித்த முகம், மகிழ்ச்சியான பேச்சு, பிற புற்று நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் உரையாடல் எனத் தனது வாழ்க்கையை வேறு வழியில் திசை திருப்பி அர்த்தமுள்ள வாழ்நாளை அர்ப்பணித்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பெண்களை மிரட்டும் கருப்பை வாய்ப் புற்றுநோய்.. காரணம் என்ன?
தனது வாழ்நாளில் அவர் சந்தித்த ஒவ்வொரு புற்று நோயாளிகளுக்கும் ரோஜாப்பூக்களை பரிசாக வழங்கி, அதனுடன் கூடவே நம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் வழங்கியுள்ளார். அவர் வழங்குவது மட்டும் இன்றி பிறரையும் அதற்காக அவர் ஊக்குவித்துள்ளார்.
அவரின் இந்த எதிர்மறையான நல்ல எண்ணத்தை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கத்திலும், புற்று நோயாளிகளுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் என அனைவரும் நம்பிக்கையூட்டும் வகையில் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதையே இந்த உலக ரோஜா தினம் வலியுறுத்துகிறது.
உங்கள் அன்பானவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு ரோஜா பூவை பரிசாக வழங்கி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். உனக்குப் பக்க பலமாக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசுங்கள். 'அன்பால் நிறைந்தது உலகு.. அன்பால் நிறைவுற்று மறையட்டும் வாழ்வு'.!
இதையும் படிங்க:World Alzheimer’s day: மறதி நோயில் இருந்து தப்புவது எப்படி?