சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவுத் தளத்தை (Cancer Genome Database) சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி திங்கட்கிழமை (பிப்.3) தொடங்கி வைத்தார்.
உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று புற்றுநோய். இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Medical Research Council) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வரவாய்ப்புள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், bcga.iitm.ac.in என்ற தரவுத் தளத்தை ஐஐடி கல்வி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. உலக புற்றுநோய் தினம் செவ்வாய்கிழமை (பிப்.04) கடைபிடிக்கப்படுவதையொட்டி இந்த சென்னை ஐஐடியின் இந்த ஏற்பாடு முக்கியத்துவத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.
2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8 சதவீதமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் பரவலாக உள்ள புற்றுநோய்களுக்கென மரபணுக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் மரபணு மாற்றங்களை கண்டறியக் கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருத்து வகைகளோ பட்டியலிடப்படவில்லை.
5 ஆண்டுகால ஆய்வு!: இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணுரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 500 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.
இந்திய மார்பகப் புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கம் பணிகள் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை (Bharat Cancer Genome Atlas – BCGA) இன்று வெளியிட்டார்.
இந்த ஆய்வின் முடிவுகளை இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் வெளிப்படையாக தெரிந்துக் கொள்ளும் வகையில் bcga.iitm.ac.in என்ற தரவுத்தளத்தை இக்கல்வி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்! தடுப்பது எப்படி?
பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் (Bharat Cancer Genome Atlas – BCGA) இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் வகையில் உள்ளது எனபதை எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும் போது, "அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற சமூகத்திற்கான உறுதிப்பாட்டில் உண்மையாக உள்ள நாங்கள், மூளைத் தரவுகளைத் தொடர்ந்து இரண்டாவதாக புற்றுநோய் மரபணு தரவுகளை வெளியிடுகிறோம்.
ஏற்படும் மாற்றம்: இதன் மூலம் இக்கொடிய நோய்க்கு வழிவகுக்கும் காரணங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு பெறப்படும் என்றும், ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்த உதவும் என்றும் நம்புகிறோம். இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அதன் திரிபுகளை வகைப்படுத்த இது உதவும்.
இதனால் ஆரம்பகட்டத்திலேயே,
- நோயைக் கண்டறிதல்
- நோய் முன்னேற்றம்
- சிகிச்சை விளைவுகளால் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை அறிந்துகொள்ள முடியும்.
மேலும் மரபணு மாற்றங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் வைரஸ் தாக்குதலின் மாற்றத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப தனித்தப்பட்ட முறையில் சிகிச்சை வழங்க முடியும். மேலும் கொரோனா காலத்தில் நோய் தொற்றை கண்டறிவற்கான பரிசோதனை கட்டணம் அதிகமானது பின்னர் குறைந்தது போல் மார்பகப்புற்றுநோய் பாதிப்பையும் முன்கூட்டியே தெரிந்துக் கொள்வதற்கான கருவியையும் உருவாக்கலாம். புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், போலியோ போன்று அழிக்க முடியும்" என்றார்.