தேனி: தேனி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்தவர் சத்யா. இவர் தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது தேனி மாவட்ட தவெக நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. இதில் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டி, தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேனி மகளிர் அணியை சேர்ந்த சத்யா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், “விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதே இயக்கத்திற்காகவும், தற்போது கட்சிக்காகவும் கடந்த ஏழு வருடங்களாக உழைத்து வரும் தனக்கு பொறுப்பு வழங்கக் கூடாது என்பதற்காக மாவட்ட செயலாளர்கள் தன் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
இரண்டு மாவட்டச் செயலாளர்களும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது உறவினர் பெண் மூலம் பொதுச் செயலாளர் ஆனந்திடம், என் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தனக்கு மகளிர் அணி பொறுப்பாளர் வழங்கக்கூடாது என தவறான தகவல்களை கூறியுள்ளனர்.
என் மீது உள்ள வழக்குகள் குறித்து தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டால் அதற்கு உரிய பதில் இல்லை. இது குறித்து தான் தவெக ஆனந்திடம் என் மீது எந்த வழக்கும் இல்லை என்று ஆதாரத்துடன் தெரிவித்தும், இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கட்சிக்காக இத்தனை வருடங்களாக தாங்கள் செய்த வேலையை அவமானப்படுத்துவது போல் உள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கட்சியின் மேல் இடத்தில் தன் மீது நல்ல அபிப்ராயம் இருப்பதாவும், தனது பிறந்தநாளுக்கு கட்சித் தலைமை வாழ்த்து தெரிவித்ததால் இதை பொறுக்காத தேனி மாவட்ட செயலாளர்கள் என் மீது இதுபோன்று புகார் தெரிவிக்கின்றனர். கட்சியின் சார்பில் அனைத்து நிர்வாகிகளின் பங்களிப்போடு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். ஆனால், தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி அவர் மட்டுமே வழங்கியது போல் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு இங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவதில்லை. உறவினர்களுக்கும், ஒரே சாதிக்காரர்களுக்கும் தான் அங்கீகாரம் கிடைக்கிறது. உழைக்கும் யாருக்கும் அங்கீகாரம் கொடுப்பதில்லை, ஜாதி சார்ந்த உறவினர்களை மட்டும் அங்கீகரிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் அவரின் கவனத்துக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.
எனக்கு பதவி வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. பதவியே கொடுத்தாலும் இந்தப் பிரச்சனை சரி ஆகாது. பதவி வந்தாலும் என்னை வேலை பார்க்க விட மாட்டார்கள். அதனால், எனக்கு பதவியும் தேவையில்லை. இதுக்கு வேறு யாராலும் தீர்வு கொடுக்க முடியாது. தளபதியால் மட்டும் தான் தீர்வு கிடைக்கும். அந்த தீர்வை கொடுத்தால் போதும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.