விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் உள்ள மதுபானக் கடையில், சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (55) மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அனுமான் நகரைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (25) என்பவர் தனது செல்போன் காணவில்லை என கூறியுள்ளார். இதனால் ராஜேந்திர பிரசாத்துக்கும், அரவிந்த் ராஜூக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே, அரவிந்த் ராஜ் தனது சட்டையில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து ராஜேந்திர பிரசாத் மீது வீசியதில் அவரது வலது கண்ணத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய அலுவலர்கள், வெட்டுபட்டு கிடந்த ராஜேந்திர பிரசாத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ராஜேந்திர பிரசாத், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், ராஜேந்திர பிரசாத்தை தாக்கிவிட்டு தலைமறைவான அரவிந்த்ராஜை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.