விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. மருந்து கலவை செய்யும்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த, ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.