விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாராயணன். இவர் மகள் முனீஸ்வரி. இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ராம்குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தம்பதியினர் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், முனீஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ராம்குமாருக்கு விவகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கோபமடைந்த ராம்குமார், நேற்று (ஜூன். 22) இரவு சாத்தூர் அண்ணாநகரில் உள்ள அவரது மாமனார் வீட்டில் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அருகில் இருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள் (55) விலக்கியுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கணவன் அருகிலிருந்த கத்தியால் மாரியம்மாளை குத்தியுள்ளார்.
இதில், மாரியம்மாள் ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர், உயிரிழந்த மாரியம்மாளின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த முனீஸ்வரி (25), அவருடைய அம்மா சந்திரா (58) சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : இறைச்சிக் கழிவுகளை கொட்டிய நபருக்கு நூதன தண்டனை!