விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கீழவிட்டார் தெருவை சேர்ந்த மூதாட்டி பொன்னம்மாள் (85). கணவரை இழந்த இவர், பிள்ளைகள் இல்லாத காரணத்தால் தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் பென்னம்மாளிற்கு அவரது உறவினர்கள் உணவளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல பொன்னம்மாளுக்கு மதிய உணவளிக்க வந்த உறவினர், அவரை பார்த்த போது அரை மயக்க நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவரை எழுப்பி விசாரித்ததில், அடையாளம் தெரியாத நபர் தன்னை தாக்கிவிட்டு, தான் அணிந்திருந்த நகைகளை திருடிச்சென்றதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்தூறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் பென்னம்மாள் லட்சக்கணக்கில் வட்டிக்கு பணம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் யாரேனும் வட்டிக்கு வாங்கியவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களோ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் அருப்புக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ரோகிணி தேவி. இவர் தூத்துக்குடி செல்லும் சாலையிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் பணி முடிந்து வழக்கம் போல் வீடு திரும்பிய போது, அடையாளம் தெரியாத நபர்கள் ரோகிணி அணிந்திருந்த எட்டு சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது கிழே விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நகர் காவல்துறையினர், நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கு காப்பீடு பெற 12 சவரன் நகை திருட்டு; செவிலியர் கைது!