விருதுநகர்: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பரப்புரை நாளை மறுதினம் (பிப். 17) நிறைவடைகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் 14 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியின் 2ஆவது வார்டில் திமுக சார்பில் கனி (எ) முத்தையாவும், அதிமுக சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர்.
இதனையடுத்து, திமுக வேட்பாளர் முத்தையா தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையும் (பிப். 13) பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது முத்தையாவிற்கு நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அவரை உறவினர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் திமுக மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வத்திராயிருப்பு பேரூராட்சி 2ஆவது திமுக வேட்பாளர் உயிரிழந்ததன் காரணமாக, அந்த வார்டில் தேர்தல் ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் சரிசெய்ய அனைத்தையும் செய்வோம்! - எடப்பாடி எச்சரிக்கை