விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 36 ஆயிரத்து 690 வீடுகள் மற்றும் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 16 ஆயிரத்து 754 வீடுகளிலும் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக 232 மருத்துவ பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று சளி, இருமல் மற்றும் காய்ச்சல் சம்பந்தமான அறிகுறிகள் கண்டறியும் பணியினை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட செவிலியர்கள் வாயிலாக விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மாம்பழப்பட்டு சாலை, பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலை மற்றும் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பஜார் தெரு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பொதுமக்கள் உடல் வெப்ப நிலையினையும், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை கண்டறியும் பணியினையும் மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து திண்டிவனம் நகராட்சி கடை வீதிகளில் முகக்கவசம் அணிந்துவரும் பொதுமக்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல்வைக்கும்படி துறை சார் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
![வீடு, வீடாக சென்று ஆய்வு செய்த ஆட்சியர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7770380_1026_7770380_1593101351766.png)