விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால், திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சியில் இணைந்தது. இதை விரும்பாத அப்பகுதியினர், திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சி சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
வியாபாரிகள் மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை ரவிக்குமார் ஆகியோர் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, மாவட்டத்தை பிரிப்பதை தாங்கள் வரவேற்பதாகவும், ஆனால் பொதுமக்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு பிரிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முறையாக பிரிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்து இருப்பதாகத் தெரிவித்தார்.