கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார், லதா தம்பதியினர். இவர்களுக்கு அபிராமி(13), திவ்யா(10), ஆனந்த்(7) என மூன்று குழந்தைகள் உள்ளனர். அசோக்குமார் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு சென்ற நிலையில், லதா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மூக்கனூர் ஏரி அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு லதா விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அபிராமி, திவ்யா, ஆனந்த் ஆகிய மூவரும் அருகில் உள்ள ஏரியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அபிராமியும், திவ்யாவும் ஆழமான பகுதிக்குச் சென்றதால், மீண்டும் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் முழ்கியுள்ளனர்.
இதைக் கண்ட ஆனந்த் கூச்சலிட்டதையடுத்து லதா, ஏரி அருகே இருந்த இளைஞர்களை அழைத்து காப்பாற்றும்படி கூறியுள்ளார். உடனே ஏரியில் குதித்த இளைஞர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டனர். ஆனால் பரிதாபமாக இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி தஞ்சையில் மீட்பு!