சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.
இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உரிய அனுமதி இல்லாமல் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காவல் துறை ஆணையருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணையை துவங்கிய சிறப்பு விசாரணை குழுவினர், எப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களின் செல்போன்களை பறித்ததுடன், எப்படி எப்.ஐ.ஆர் வெளியானது? என 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில், சிறப்பு விசாரணை குழு பத்திரிக்கையாளர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடை விதிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளரிடம் ஏன் இதுவரை சிறப்புக்குழு விசாரணை நடத்தவில்லை? பத்திரிக்கையாளர்களின் குடும்ப விவரம், உறவினர்கள் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கேட்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம்: வைகோ முன்னாள் உதவியாளரிடம் விசாரணை! - VAIKO FORMER ASSISTANT
மேலும் பத்திரிக்கையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தல் செய்ய கூடாது என உத்தரவிட்டார். மேலும், பத்திரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் உரிய சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு பத்திரிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.