வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தின் 34ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், 'இந்தியாவில் 7500 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் வளம் உள்ளது. தற்போது சென்னையில் ஒரு யூனிட் மின்சாரம் 6 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. எனவே, கடல்நீரை சுத்திகரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் 3 ரூபாய்க்கும் கீழ் அதாவது 2.40க்கு மின்சாரம் கொடுக்க முடியும்.
இதனால் கிடைக்கும் தண்ணீரை குடிநீர் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய தேவையாக மின்சாரம் உள்ளது. தண்ணீரை பாதுகாப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற தண்ணீர் சேமிப்பு திட்டங்களை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் செயல்படுத்துவது தொடர்பாக இரண்டு மாநில முதலமைச்சர்களிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வெற்றியடையவில்லை.
ஆனால் நான் நம்பிக்கையாக உள்ளேன், தண்ணீர் பிரச்னையை தீர்க முடியும் என நம்புகிறேன். இந்தியாவின் வளர்ச்சியில் சிறு குறு தொழில் நிறுவனம்(எம்எஸ்எம்இ) 29% பங்கு வகிக்கிறது. இதை 50% ஆக அதிகரிக்க முயற்சி எடுத்து வருகிறோம். அதேபோல் நாட்டின் மொத்த ஏற்றுமதியிலும் சிறுகுறு தொழில் நிறுவனம் 49% பங்கு வகிக்கிறது.
இந்நிறுவனம் மூலம் கடந்த 5 ஆண்டில் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். அடுத்த 5 ஆண்டில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இலக்கு வைத்துள்ளோம்' என்றார்.