வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (21). இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. ஹேமலதா கருவுற்ற நிலையில், அவரது கணவர் மணிகண்டன் பணிக்கு சென்று விட்டார்.
இதனால், கருவுற்ற மூன்று மாதம் முதல் ஹேமலதா, ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஹேமலதாவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இது குறித்து ஹேமலதா தனது கணவரிடம் கூறி உள்ளார்.
இந்த நிலையில், மணிகண்டன் கடந்த 9ஆம் தேதி இரவு குழந்தையைப் பார்க்க, ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மனைவி மற்றும் குழந்தையை அவர் பார்த்துள்ளார். அப்போது, குழந்தை பார்ப்பதற்கு தன்னைப் போல இல்லை என்றும், இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறி மணிகண்டன் தனது மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த பிளேடால் பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர் ரத்தம் கொட்டிய நிலையில், வலி தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தை கதறி துடித்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றம் செய்யப்பட்டது.
அங்கு மருத்துவர்கள் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மணிகண்டனை தேடி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மனைவி மீதுள்ள கோபத்தில், பசியால் பாலுக்கு அழுத 14 மாதப் பெண் குழந்தைக்கு தந்தை விஷம் கொடுத்த சோக சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தூர் மருத்துவமனையில் 18 குழந்தைகள் உயிரிழப்பு? கலப்பட பால் காரணமா?