ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடராஜன் - கன்னியம்மாள் தம்பதியினர். இவர்களது வீட்டில் சிலிண்டர் அடுப்பு பழுதாகியுள்ளது. இதனையடுத்து சிலிண்டர் அடுப்பை பழுது பார்க்கும் காளியப்பனை(25) அழைத்துள்ளனர்.
காளியப்பன் சிலிண்டர் அடுப்பை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது சிலிண்டர் வெடித்ததில் அங்கிருந்த நடராஜன், காளியப்பன், கன்னியம்மாள் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மேலும், இந்த விபத்தில் வீட்டின் அருகில் இருந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, பள்ளியில் பணியில் இருந்த முல்லை என்ற ஆசிரியர் சுவற்றின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவலளித்துவிட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் பலத்த காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். தொடர்ந்து, விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கேஸ் அடுப்பு பழுது பார்க்க வந்தவர் அனுபவமில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சிலிண்டர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு - 15 பேர் படுகாயம்!