வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த சேர்க்காடு கம்மவான் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (42) இவரது மனைவி மஞ்சுளா (38). இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி பாலாஜி, மஞ்சுளா இருவரும் வெளியில் சென்றதால், சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அதேபகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ்(62) என்பவர், சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சம்பவம் தொடர்பாக யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மோகன்தாஸ் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்த போது குழந்தை தனக்கு நடந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பாலாஜி, மோகன்தாஸ் மீது திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம் மோகன்தாசுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 366ன் கீழ் 7 ஆண்டுகள், போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள், சட்டப் பிரிவு 506 (1)னின் கீழ் ஒரு ஆண்டு என மொத்தம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் மொத்தம் வழங்கப்பட்ட தண்டனை வருடங்களில், எது அதிகமாக உள்ளதோ அத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அந்த வகையில் மோகன்தாசுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு - இரட்டை ஆயுள் வழங்கிய நீதிமன்றம்!