மதுரை: திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாளான இன்று (பிப்.6) வைரத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமியை தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்ப திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக இன்று உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் மஞ்சள் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.
இதையும் படிங்க: மத நல்லிணக்கத்திற்கான அடையாளம் நிறைந்த தலமே திருப்பரங்குன்றம்!
தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்ப திருவிழா நடைபெறும்.
இவ்விழாவை முன்னிட்டு காலை 10 மணி அளவில் தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள்வார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுத்து தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இதே போல இரவு மின் ஒளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகள் கோயில் அறங்காவலர் குழு தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.