நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இதில் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 219 ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 27 மண்டலங்களைக் கொண்ட 324 வாக்குச்சாவடிகளுக்கு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 ஆம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு தலைமை அலுவலர், அலுவலர்கள் I, II, III, IV ஆகியோருக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.சிவராசு நேரில் வருகை புரிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். இந்நிலையில், ஏற்கனவே பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்களில் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு தலைமை அலுவலராக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்களுக்கு, இம்முறை வாக்குப்பதிவு அலுவலர் II நிலை பணி நியமனம் வழங்கியுள்ளனர்.
இதுபோன்ற நியமனம் தங்களின் அனுபவித்திற்கு குறைந்த மதிப்பீடு எனக் கூறும் ஆசிரியர்கள் தகுதி மாறி பணி நியமன ஆணை வழங்கியுள்ளதாக புகார் கூறி பயிற்சியில் வருகைப்பதிவு செய்யாமல் காத்திருப்பில் உள்ளனர். பிற்பகலில் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.