மதுரை: உயரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்து காவலர் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடலுறுப்புகள் 8 பேருக்கு அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் ஆயுதப்படை காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் காவலர் மோகன்குமார் (31). இவரது மனைவி யோகலட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஜனவரி 30ஆம் தேதி, தன் வீட்டின் அருகே வளர்ந்திருந்த மரத்தை வெட்டும்போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுள்ளது. இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவசர விபத்து சிகிச்சைப்பிரிவில் உள் நோயாளியாக பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், மோகன்குமார் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர். அதன்படி அவரது மனைவி யோகலட்சுமியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று (பிப்ரவரி 06) அரசு ராஜாஜி மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்காகக் காத்திருந்த நபர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் ஆகிவை வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி தென்னூரிலுள்ள காவேரி மருத்துவமனைக்கும், இதயம் சென்னையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை; 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!
இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் கூறுகையில், “ மூளைச்சாவடைந்த காவலர் மோகன்குமாரின் உடலுறுப்புகளால் எட்டு பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும், அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறை மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழக அரசின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்படும். காவல்துறைக்கும், மோகன்குமாரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, உடல் உறுப்பு தானம் செய்த கவாலரர் மோகன்குமார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும்.